புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை செயற்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளன எனவும், இவ்வருடத்துக்குள் அதனை வழங்குவதற்கான நடவடிக்கை இடம்பெறும் எனவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை செயற்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை நிறைவுசெய்துள்ளோம். கைவிரல் அடையாளம் உள்ளிட்ட பயோமெற்றிக் தரவு சேகரிப்பு பணி ஜுன் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். பிரதேச செயலகங்கள் ஊடாக இதற்கான நடவடிக்கை இடம்பெறும். இவ்வருடத்துக்குள் திட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, நுவரெலியாவில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாணத்துக்கான அலுவலகம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் செயற்பட ஆரம்பிக்கும்.
இதன்படி ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை பெறும் சேவையும் அங்கு வழங்கப்படும்.
அத்துடன், வடமேல் மாகாணத்துக்கான அலுவலகம் குருணாகலில் செயற்படும்.” – என்றார்.
