” உயிரிழந்த நபரொருவருக்கு இறுதிக்கிரியைகள் செய்யும்போது , எல்லை நிர்ணயம் பார்க்காமல் மனிதாபிமான முறையில் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ அனுமதி வழங்கி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். .
எல்லை மீள் நிர்ணய விவகாரத்தால் கடந்த வாரத்தில் சடலங்களை புதைப்பதற்கும், தகனம் செய்வதற்கும் அண்மையில் ஹட்டன்,டிக்கோயா நகர சபை மற்றும் நோர்வூட் பிரதேச சபைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஹட்டன் (LAA ADAMS) விருந்தகத்தில் இடம்பெற்ற போது ஜீவன் தொண்டமான் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் ஜீவன் மேலும் கூறியவை வருமாறு,
” ஹட்டன் ரொத்தஸ் பிரதேசங்களில் மரணங்கள் நிகழும்போது, சடலங்களை ஹட்டன் நகர சபை ஊடாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல் நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட டிக்கோயா தரவளை கொலணியில் மரணங்கள் நிகழும்போது, சடலங்களை நோர்வூட் பிரதேச சபை ஊடாக அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எல்லை மீள் நிர்ணய விவகாரத்தால் இவ்விரு சபைகளுக்குரிய பிரதேசங்களில் மரணங்கள் நிகழும்போது எல்லை நிர்ணயம் பார்க்காமல் மனிதாபிமான முறையில் சடலங்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முறுகல் நிலையை தோற்றுவிக்காது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.
இக் கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி சக்திவேல், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பிலிப்குமார், நகரசபை பிரதேச சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் ஹட்டன் நகர வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.










