புத்தளத்தில் ஆளுந்தரப்புக்குள் ‘அரசியல் போர்’ – நடப்பது என்ன?

தெற்கு அரசியல் களம் கொதிநிலையில் உள்ள நிலையில், புத்தளம் அரசியல் களத்திலும் ‘மினி’ யுத்தமொன்றே ஏற்பட்டுள்ளது. மொட்டு கட்சியின் மூன்று இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில்தான் இவ்வாறு அரசியல் யுத்தம் மூண்டுள்ளது. இதற்கிடையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலுப்படுத்தும் முயற்சியும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த, அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகிய மூவரும் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தியே அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துவருகின்றனர். அந்த மாவட்டத்தில் இருந்தே மூவரும் நாடாளுமன்றம் தெரிவாகினர்.

இதனால் மூவருக்கிடையில் அவ்வப்போது முறுகல்கள் இடம்பெறுவது வழமை. ஆனால் தற்போது கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவே அறியமுடிகின்றது. இதற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சரின் நிதி ஒதுக்கீடே காரணம் எனவும் அறியமுடிகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வடமேல் மாகாணசபையின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரதகுமாரவுக்கு 10 வீதிகளை புனரமைப்பதற்கு, துறைசார் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நிமல் லான்சா நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த சனத் நிஷாந்த, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை தொடர்புகொண்டு வினவியுள்ளார்.

“ இராஜாங்க அமைச்சரே, எனது அபிவிருத்தி திட்டங்களும் ஆரம்ப நிலையில் உள்ளன. ஆனால் நிதி ஒதுக்கப்படவில்லை. அப்படி இருக்கையில் சுதந்திரக்கட்சி உறுப்பினருக்கு எப்படி ஒதுக்கப்பட்டது.” – என கேட்டுள்ளார்.

“ இராஜாங்க அமைச்சர்களான அருந்திக்க, பிரியங்கரவின் வேண்டுகோளுக்கமையவே ஒதுக்கப்பட்டது.” என நிமல் லான்சா குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அருந்திக்கவை தொடர்புகொண்ட, சனத் நிஷாந்த, சம்பவம் பற்றி கேட்டறிந்துள்ளார்.

“ நான் இல்லை, பிரியங்கரவே இதன் பின்னிணியில் உள்ளார்.” என அருந்திக்க பதிலளித்துள்ளார்.

சனத் நிஷாந்தவை, பிரியங்கர வெளிப்படையாகவே விமர்சித்து வருவதால் அவரிடம் இது பற்றி சனத் எதுவும் வினவவில்லை.

மறுபடியும் நிமல் லான்சாவை தொடர்புகொண்ட அவர்,

“ தேர்தல் காலத்திலும் எனக்கு எதிராக எல்லாம் சேர்ந்து சேறு பூசினீர்கள். இப்போதும் காலைவார பார்க்கின்றீர்கள். இப்படி செய்ய வேண்டாம்.” என கடுந்தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சினை தற்போது மொட்டு கட்சியின் தலைமைப்பீடம்வரை சென்றுள்ளது.

Related Articles

Latest Articles