பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் மத்திய மாகாணம் முதலிடம்

கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் மத்திய மாகாணம் முதல் இடத்தில் உள்ளதாக மாகாண ஆளுனர் லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.

மாகாண கொவிட் தடுப்பு செயலணியின் மீள்பரிசிலனைக் கூட்டத்தில் அவர் மேற்படி தகவலை தெரிவித்தார். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், இங்கு அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் 30 முதல் 60 வரையிலான வயதெல்லைக்கு உட்பட்டவர்களில் பாதிபேர் வரை பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளதாக ஆளுனர் குறிப்பிட்டார். மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில், சிவனொளி பாதமலை யாத்திரை செல்லும் அடியார்கள், உள்நாட்டு – வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே, சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய மாகாண ஆளுனர் ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நிஹால் வீரசூரிய, மத்திய மாகாண சபையின் பிரதம செயலாளர் காமினி ராஜரட்ன, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பீ.எச்.என். ஜயவிக்ரம ஆகியோரும் பங்கேற்றார்கள்.

Related Articles

Latest Articles