பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுவரும் தோட்ட தலைவர்!

மலையக தொழிற்சங்கம் ஒன்றின், பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் தோட்ட தலைவர் ஒருவர், சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

கெர்கஸ்வோல்ட் பகுதியிலிருந்து தனக்குக் கிடைத்த தகவலொன்று தன்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ப்ரனிதா குறிப்பிட்டுள்ளார்.

“மதுபானத்தை அருந்துவிட்டு மயக்கமடைந்த இரு சிறுவர்கள் தொடர்பான தகவல் எனக்கு கிடைத்தது. கெர்கஸ்வோல்ட் தோட்டத்தில், பல வருடங்களாக சட்டவிரோதமான மதுபான போத்தல்கள், போதைப்பொருள்களை தோட்ட தலைவர் விற்பனை செய்து வருகிறார்.

மதுபான போத்தல்களை வீட்டுக்குள் வைத்து விற்பனை செய்தால் பொலிஸாரின் திடீர் சோதனையில் சிக்கிக்கொள்வோம் என்பதால், அவரது வீட்டின் அருகே உள்ள தேயிலை செடிகளுக்குக் கீழ் மதுபான போத்தல்களை மறைத்து வைத்து விடுவாராம். இப்படி அண்மையில் தேயிலை செடிக்குள் 3 மதுபான போத்தல்களை மறைத்து வைத்ததை அங்குள்ள சிறுவர்கள் மூவர் கண்டுள்ளனர்.

இரகசியமான முறையில் தோட்ட தலைவரால் மறைத்து வைக்கப்பட்ட மதுபான போத்தல்களை அந்த மூன்று சிறுவர்களில் இருவர் எடுத்து இரகசியமாக அருந்தியுள்ளனர்.” எனவும் ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய தகவல் வெளியிட்டார்.

மாலையாகியும் வீடு திரும்பாத இரு சிறுவர்களை வீட்டார் தேடியுள்ள நிலையில், ஒருபோத்தல் சாராயத்தையும் குடித்துவிட்டு போதையில் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மறுநாள் போதை தெளிந்தப் பின்னர் சிறுவர்களிடம் விசாரித்தபோது, தோட்ட தலைவரால் பொலிஸாருக்குப் பயந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களை அவருக்கு தெரியாமல் எடுத்து அருந்தியதாக கூறியுள்ளனர்.

எனினும், இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் பொலிஸாருக்கோ, பாதிக்கப்பட்ட சிறுவர்களை வைத்தியசாலைக்கோ அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்காது எவருக்கும் தெரியாமல் மூடி மறைத்து வைத்துள்ளனர். ”

இது தொடர்பில் கெர்கஸ்வோல்ட் தோட்ட மக்கள் தனக்கு தெரிவித்ததாகவும் ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் ப்ரனிதா வர்ணகுலசூரிய கூறுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு செய்திருந்தும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நான் விரைவாகச் செயற்பட்டு பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து சிறுவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியிருந்தேன்.

மலையகத்திலிருந்து கொழும்புக்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற இரு பெண்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். தங்களது பிள்ளைகளுக்காக வீட்டைவிட்டு தொழிலுக்காக வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளுக்கு தாய்மார்கள் செல்கிறார்கள். ஆனால், பிள்ளைகளோ போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலை மலையகத்தில் அதிகரித்துள்ளதாகவும் ப்ரனிதா மேலும் கூறுகிறார்.

Related Articles

Latest Articles