போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருவது பிரச்சினைக்குரிய விடயமாகும். எனவே, இச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளைச் சட்டத்தின் 27ஃ2 இன்கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ நாட்டில் அன்று இருந்த பிரிவினைவாத, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவே பயங்கரவாத தடைச்சட்டம் 1979 இல் தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டது. 3 தசாப்த கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து, 15 வருடங்களுக்கு மேலாகியும் இந்த சட்டம் நீக்கப்படாமல் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
மேற்படி சட்டமானது, அரசியல் எதிர்கருத்து கொண்டோர், அரசுக்கு எதிரான போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவோர் மற்றும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதனால் சர்வதேச சட்டங்கள் மற்றும் சமவாயங்கள் மீறப்படுகின்றன.
நாட்டை தற்போது ஆள்கின்ற தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் கதைத்துள்ளனர்.
எனவே, இச்சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்தான தமது நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.” – என்றார்.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், 72 மணிநேரம் தடுப்புக் காவலில் வைப்பது தொடர்பாக அரசாங்கத்தின் கருத்து தொடர்பிலும், இந்த சட்டத்தின் கீழ் வாரண்ட் இல்லாமல் கைது செய்வது உள்ளிட்டவை குறித்தும் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின்படி இதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு பிரிதொரு நாளில் பதில் வழங்கப்படும் என நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
