” மலையக மக்களுக்கான பொதுவான விடயங்களின்போது அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்று அழைப்பு விடுத்துள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம்.
‘சக்தி’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நியூஸ்லைன்’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே திகாம்பரம் இந்த அழைப்பை விடுத்தார்.
” நானும், மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் கடந்த காலங்களில் எதிரும், புதிருமாகவே இருந்தோம். எங்கு பார்த்தாலும் பிரச்சினைதான்வரும். ஒற்றுமை இருக்கவில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. நானும், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவனும் நாடாளுமன்றத்தில் இரண்டு, மூன்று தடவைகள் பேச்சு நடத்தியுள்ளோம்.
பொதுவிடயங்களின்போது இணைந்து செயற்பட இணக்கம் எட்டப்பட்டது. நான் அவர்களை விமர்சிப்பதில்லை. அவர்கள் தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்ததால்தான் கூட்டமைப்பினர் பதில் விமர்சனம் தொடுத்தனர். எனவே, விமர்சனங்களை தவிர்த்துக்கொண்டால் நல்லது. மக்களுக்கு செய்த சேவைகளை பற்றி பேசியே நான் கூட்டங்களை நடத்திவருகின்றேன்.” – எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.










