மக்கள் ஆணை இல்லாமல் ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ ஏற்பதற்கு தான் தயாரில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் திருடர்கள் குழுவின் பாதுகாவலராக மாறி தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை ஜனாதிபதி மறைத்து வருகின்றார் எனவும் சஜித் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மொட்டு கட்சியின் 134 உறுப்பினர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி கதிரைக்கு சென்ற தற்போதைய ஜனாதிபதி,மொட்டு திருடர்கள் குழுவின் பாதுகாவலராக மாறியுள்ளார்.
பூரண அரசாட்சியை தருவதாக கூறினாலும் மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியையோ பிரதமர் பதவியையோ ஏனைய பதவியையோ அரச அதிகாரத்தையோ பெற நான் தயாரில்லை.
கடந்த காலங்களில் மலட்டுக் கொத்து,மலட்டு அறுவை சிகிச்சை என கூறி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தினர். இதனால்தான் போராட்டத்திற்கு முன் நல்லிணக்கம் என்பது கடுமையான வார்த்தை பிரயோகமாக அமைந்து காணப்பட்டது.
ஒரு குடும்பம் ஒருதலைபட்சமாக அதிகாரத்திற்கு உரிமை கோரியவாறு தனி ஆட்சியை நடத்திய நாட்டில் ஒரு கட்சிக்குள் பிரதிவாதங்கள் ஏற்படும் போது, கட்சிகளுக்குள் மோதல்கள் உருவெடுத்துள்ளது என்று விளம்பரம் செய்தாலும் அது மோதலாகாது.
முறைமை மாற்றம் கோரும் நாட்டில் எழுந்துள்ள இந்த வாதங்கள் ஒரு ஜனநாயகப் போக்கின் தொடக்கமாகும். தலைவர் தவறு செய்தாலும் சுதந்திரமாக பேசுவதே அடிமை அரசியலில் இருந்து விடுபட்டு ஜனநாயக பாதையில் பிரவேசிப்பதற்கான இலட்சனம்.” – என்றார்.