மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜீவன் பணிப்பு

பண்டாரவளை, பூனாகலை – கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், மண்சரிவு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து தமக்கு விரிவானதொரு அறிக்கையை முன்வைக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளிடம் இன்று வலியுறுத்தினார் அமைச்சர்.

இவ்வனர்த்தம் தொடர்பில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார். அதன் மூலம் மக்களுக்கு தேவையான அடுத்தக்கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்தகையோடு, தனது அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்ட ஜீவன் தொண்டமான், உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு ஆலோனை வழங்கினார்.

அதன்பின்னர் பிரதேச செயலாளர், பாதுகாப்பு தரப்பினர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், ட்ரஸ்ட் நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய அமைச்சர், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பணிப்பு விடுத்தார்.

அப்பகுதியில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஏனைய இடங்கள் இருப்பின், அங்கு மக்கள் வாழ்வார்களாயின், அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles