கட்டுரையாளர் – க.பிரசன்னா
நன்றி – தினக்குரல்
மத்திய மாகாணத்திலிருந்து க.பொ.த.சாதாரணத்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றும் மாணவர்களில் வருடாந்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகும் தகுதியை இழக்கின்றனர்.
2017 – 2022 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மத்திய மாகாணத்திலிருந்து சாதாரணத்தரப் பரீட்சைக்கு முதல்தடவையாக தோற்றிய 65,471 மாணவர்கள் உயர்தரத்துக்கான தகுதியை பெற்றுக் கொள்ளவில்லை என்ற விடயம் கடந்த வார கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு பாரிய தொகையினர் சாதாரணத்தரத்தில் வெளியேறும் நிலையில் உயர்தரத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் எத்தனை? அவர்களிலிருந்து எத்தனை பேர் அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றனர்? போன்ற விடயங்களை இந்த வாரம் அவதானிக்கலாம்.
இலங்கை கல்வி அமைப்பில் சாதாரணத்தரம் மற்றும் உயர்தரத்துக்குப் பின்னரே கல்வியியற் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுகள் ஆரம்பமாகின்றன. எனவே கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுகளை உறுதிப்படுத்துவதற்கு சாதாரணத்தரம் மற்றும் உயர்தரங்களில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அவற்றை விடுத்து நுவரெலியா மாவட்டத்திலிருந்து கணித, விஞ்ஞான பிரிவுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரஸ்தாபிப்பதில் எவ்வித பயனும் இல்லை.
2017 – 2022(2023) ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 1,044,869 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளதுடன் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 151,799 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை.
மத்திய மாகாணத்தில் 2017 – 2022(2023) ஆம் ஆண்டு வரையான ஆறு வருட காலப்பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 211,020 மாணவர்களில் 130,912 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 80,108 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லையென்பதுடன் 19,235 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்மொழிமூல பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வலய கல்வி அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் (சில வலய கல்வி அலுவலகங்கள் தகவல்களை வழங்கவில்லை) மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் பின்வருமாறு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அமைந்துள்ளன.
மாத்தளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 – 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு 4460 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 2734 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 1726 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 221 மாணவர்களும் 2016 இல் 271, 2017 இல் 212, 2018 இல் 301, 2019 இல் 424, 2020 இல் 297 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
கண்டி கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 – 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு 3131 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 1745 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 1758 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 254 மாணவர்களும் 2016 இல் 201, 2017 இல் 174, 2018 இல் 216, 2019 இல் 244, 2020 இல் 257 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
வத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 – 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு 1827 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 976 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 851 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 112 மாணவர்களும் 2016 இல் 159, 2017 இல் 123, 2018 இல் 138, 2019 இல் 167, 2020 இல் 152 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
நாவுல கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 – 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் 40 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 25 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 15 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2016 இல் 06 மாணவர்களும் 2017 இல் 01, 2018 இல் 02, 2019 இல் 04, 2020 இல் 02 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015, 2016, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1448 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 757 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 691 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 149 மாணவர்களும் 2016 இல் 203, 2019 இல் 205, 2020 இல் 134 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 – 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு 2506 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 1578 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 928 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 170 மாணவர்களும் 2016 இல் 123, 2017 இல் 114, 2018 இல் 136, 2019 இல் 173, 2020 இல் 212 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
கலேவெல கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 – 2019 வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு 306 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 602 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 338 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை.
தெநுவர கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 – 2019 வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு 993 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 607 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 386 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 85 மாணவர்களும் 2016 இல் 65, 2017 இல் 65, 2018 இல் 96, 2019 இல் 75 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் வருடாந்தம் 1072 வரையான மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாகவும் அவர்களில் 710 மாணவர்கள் சித்தியடைவதுடன் 362 மாணவர்கள் சித்தியடைவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தினால் அண்ணளவான தகவல்களே வழங்கப்பட்டுள்ளதே தவிர உண்மையான புள்ளிவிவரங்கள் வழங்கப்படவில்லை. இதனால் இக்கல்வி வலயத்தின் பெறுபேறுகளை அறிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வத்தேகம கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2015 – 2020 வரையான 6 வருட காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் 891 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் அவர்களில் 536 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 365 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. 2015 இல் 65 மாணவர்களும் 2016 இல் 67, 2017 இல் 63, 2018 இல் 63, 2019 இல் 53, 2020 இல் 54 மாணவர்களும் இவ்வாறு சித்தியடையவில்லை.
குறித்த காலப்பகுதியில் உயர்தரத்தில் கலை, வர்த்தகம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் அதிக மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ள போதும் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் குறைந்தளவான மாணவர்களே பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். 2015 – 2020 காலப்பகுதியில் கணித பிரிவில் 10 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் 9 மாணவர்கள் சித்தியடையவில்லை. விஞ்ஞான பிரிவில் 14 மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் 4 மாணவர்கள் சித்தியடையவில்லை.
ஹட்டன் கல்வி வலய தமிழ் மொழிமூல பாடசாலைகளில் 2015 இல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 972 மாணவர்களில் 700 மாணவர்கள் (விஞ்ஞான, கணித துறைகளில் 125 மாணவர்கள் உள்ளடங்களாக) சித்தி பெற்று 72 வீதம் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருந்தனர். எனினும் வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதிலிருந்து வேறுபட்டதாகவே காணப்படுகிறது. அதேபோல 2016 ஆம் ஆண்டு 987 மாணவர்களில் 771 மாணவர்கள் (விஞ்ஞான, கணித துறைகளில் 151 மாணவர்கள் உள்ளடங்களாக) சித்தி பெற்று 78 வீதம் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
2017 ஆம் ஆண்டு 665 மாணவர்களில் 618 மாணவர்களும் (விஞ்ஞானம், கணிதம் – 94, வர்த்தகம் – 153, கலை – 371) 2018 ஆம் ஆண்டு 946 மாணவர்களில் 751 மாணவர்களும் (விஞ்ஞானம், கணிதம் – 112, வர்த்தகம் – 143, கலை – 496) 2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 936 மாணவர்களில் 690 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 2015 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 979 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருக்கவில்லை.
ஹட்டன் புனித கெப்ரியல் தேசிய கல்லூரியில் 2015 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயர்தர கலைப்பிரிவில் தமிழ்மொழி மூலமாக 104 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 98 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஆறு மாணவர்கள் சித்தியடையவில்லை. வர்த்தகப் பிரிவில் தமிழ்மொழி மூலமாக 163 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 139 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 24 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. இப்பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவு சிங்கள மொழியில் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது.
ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரியில் 2015 – 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமாக உயர்தரத்துக்கு தோற்றிய 1619 மாணவர்களில் 1289 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 330 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை.
இவற்றில் உயிரியல் பிரிவில் 655 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 475 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
180 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. இயற்பியல் விஞ்ஞான பிரிவில் 275 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 216 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 59 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை.
வர்த்தகப் பிரிவில் 311 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 282 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 29 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. கலைப் பிரிவில் 157 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 128 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 29 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை.
நுண்கலைப் பிரிவில் 127 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 111 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 16 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. வெகுஜன ஊடகப் பிரிவில் 2017 – 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 13 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 05 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 08 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை. தொழில்நுட்ப பிரிவில் 81 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 72 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 09 மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையவில்லை.

2016 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த எந்த மாணவர்களையும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உள்வாங்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கடந்த வருடங்களில் பல கணித, விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக அரசியல்தலைமைகளால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனின் கடந்த காலங்களில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் சித்தியடைந்த பல மாணவர்கள் கல்வியியற் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படாமைக்கான காரணம் என்ன? தற்போது உயரதரத்தை கொண்டுள்ள பல பாடசாலைகள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றிய வளப்பற்றாக்குறைகளுடனேயே இயங்கி வருகின்றன. அவற்றை பூர்த்தி செய்வதற்கு அரசியல் தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கை தான் என்ன?
பெரும்பாலான மாணவர்கள் உயர்தரத்தில் சித்தி பெற்றாலும் கல்வியியற் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவுகளுக்கான வெட்டுப்புள்ளிகளை பெற்றுக்கொள்வதற்கு மாணவர்கள் தவறுகின்றனர். எனவே மாணவர்களின் சித்தியை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தான் என்ன?
ஆனால் மத்திய மாகாணத்தில் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட ஏனைய அனைத்து பிரிவுகளிலும் வளமான ஆசிரியர்களை உருவாக்குவதற்கு அவர்கள் கல்வியியற் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாக வேண்டிய அவசியம் இல்லை. அதுதான் எந்த சமூகத்துக்கும் வழங்காத சலுகையாக உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர் எனும் அடிமட்ட நியமனத்தை பெற்றுக் கொடுக்க எமது தலைவர்கள் இருக்கின்றார்களே?
தொடரும்…










