இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் இடா நகருக்கு அருகே ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங்கம் (மத வழிபாட்டு கூட்டம்) நிகழ்ச்சிக்கு நேற்று மதியம் ஏற்பாடு செய்திருந்தார்.
கூட்டத்தில் வரும் மக்கள் அமர்வதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல்போடப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டம் நடைபெற்ற இடத்தில் போதுமான காற்றோட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. தவிர, அதிக அளவில் அனல் காற்றும் வீசியுள்ளது. இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நிகழ்ச்சி நடைபெற்ற பந்தலில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற தொடங்கினர். அப்போது, திடீரென நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் ஓடியுள்ளனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர்.
அவர்கள் மீது மேலும் சிலர் விழுந்தனர். கீழே விழுந்தவர்களை பார்க்காமல் பலரும் அவர்கள் மீது ஏறி ஓடியுள்ளனர். இதனால் ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 200 இற்கு மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். சம்பவம் அறிந்ததும் பொலிஸார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அங்குமயங்கி கிடந்தவர்களை மீட்டு பல்வேறு அரசு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் 90 பெண்கள ;உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களது சடலங்கள் ஹாத்ரஸ் மாவட்ட அரசு வைத்தியசாலை, அலிகர் அரச வைத்தியசாலை, இடா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமைகவலைக்கிடமாக இருப்பதால்உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
போலே பாபா என்ற சாமியார் இங்கு பிரசங்கம் செய்ய அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து, ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள இடா பகுதியில் தற்காலிக அனுமதி வழங்கியிருந்தோம்.
பிரசங்கம் நடைபெற்ற பந்தல் அமைந்திருந்த பகுதியில் அதிக வெப்பம் நிலவியது. போதுமான காற்றும் வரவில்லை. இதனால் பந்தலில் அமர்ந்திருந்த மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் பலர் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். அப்படி வெளியேறும்போதுதான் நெரிசல் ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஹாத்ரஸ் பகுதியை சேர்ந்த ஒருசிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என்று பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.