சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக் கூட்டணியின் முன்னணிப் பிர முகர் மனோ கணேசன். நேற்றுமுன்தினம் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் ஒன்று புதிய பதில் ஜனாதிபதி ரணிலினுடையது. பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றமையை ஒட்டி ரணிலுக்கு வாழ்த்துச் சொன்னார் மனோகணேசன்.

“”எங்களுக்கிடையில் இது என்ன சம்பிரதாய வாழ்த்துக்கள். அதை விடுங்கள். இருபதாம் திகதிக்குப் பின்னர் நாங்கள் என்ன செய்வது என்பது குறித்துபேசுவோம்” – என்றார் ரணில்.
இருபதாம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் குறித்து அவர் ஏதும் பிரஸ்தாபிக்கவில்லை. அந்த விடயத்தைத் தொட்டுக் கூட பார்க்கவில்லை ரணில். அந்தத் தேர்தலில் தான் வெல்வது உறுதி, அதற்குப்பின்னர் என்ன செய்வது என்பது குறித்துப் பேசுவோம் என்ற தோறணையில்
ரணிலின் பேச்சு இருந்தமை கண்டுமனோ கணேசன் ஒரு தடவை ஆச்சரியப்பட்டுத்தான் போனார்.
மூன்று விடயங்களை ரணில் அன்று மனோ கணேசனிடம் கூறினார்.
“”புதன் ஜனாதிபதி தேர்தல் திருவிழா நடந்து முடிந்ததும் உடன் தாமதம் இன்றி19ஆவது திருத்தத்தை கொண்டு வந்து விடுவோம். எல்லா கட்சிகளும் சேர்ந்து தேசிய அரசு அமைக்க ஏற்பாடு செய்வோம். அதுமட்டுமல்ல, இப்போது தென்னிலங்கையில் இனவாதப் பேச்சு இல்லை.
இதுதான் தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வு வழிகளை நகர்த்துவதற்கும் கூட சரியான சந்தர்ப்பம். இந்தமூன்றுக்கும் உங்கள் ஒத்துழைப்பும்
பங்களிப்பும் ஈடுபாடும் எனக்கு அவசியம் தேவை.” என்றார் பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க.
“நிச்சயமாக வழங்குவேன்!” – என்று உறுதி அளித்தார் மனோ.
அவருக்கு ரணில் கொடுத்த இந்தச்செய்தியில் வடக்கு, கிழக்குத் தமிழருக்கும்ஒரு முக்கியமான சமாச்சாரம் அடங்கி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
மனோ கணேசனுடன் இந்த விடயங்களைப் பேசிய ரணில், தமிழ்த் தரப்புகளுடனும் நிச்சயமாக இப்படி இதே தொனியில்பேசி இருப்பார் என்று நம்புகிறேன். விவரம் எனக்கு தெரியவரவில்லை. மலிந்தால் சந்தைக்கு – சந்திக்கு – வரும் அப்போது பார்க்கலாம்.
மனோ கணேசன் இப்போது வரை சஜித் தரப்போடுதான் நிற்கின்றார். ஆனால் அவருக்குத் தரப்பு முக்கியம் இல்லை. தமது மக்களின் நலன்தான் முக்கியம்.
20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்வு வாக்கெடுப்பு இரகசியமுறையில். யார், யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தெரியாது.
சஜித் அணியுடன் இப்போது வரை நிற்கும் மனோ கணேசன், இருபதாம் திகதி ரணிலுக்கு வாக்களித்து விட்டு வந்தாலும்நான் ஆச்சரியப்பட போவதில்லை.
ஏனென்றால் மனோ கணேசனுக்குத் தான் அணி சேர்ந்த தரப்பு முக்கியமல்ல. தனது மக்களின் நலன்தான் முக்கியம்.அதை முன்னிறுத்தி அவர் எந்த முடிவையும் எடுப்பார்.பார்ப்போம் நடக்கப் போகின்றவற்றை.
– மின்னல் –
நன்றி – காலைக்கதிர் மின்னிதழ்
