மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் நடை பயணத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரான பா. சிவநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” மலையக மக்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்களாகின்றன. இதனை நினைவுகூரும் முகமாக
மலையகம் 200 என்ற தொனிப்பொருளின்கீழ் தமிழ் முற்போக்கு கூட்டணியால் நடை பயணமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஹட்டன், நுவரெலியா ஆகிய பகுதிகளில் இருந்து ஆரம்பமாக நடை பயணம், தலவாக்கலை நகரில் சங்கமிக்கவுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டனி நான்கு வருட காலத்துக்குள் காணி உரிமை, வீட்டு உரிமை பிரதேச சபை அதிகரிப்பு, பிரதேச செயலகம் அதிகரிப்பு, பிரதேச சபையின் ஊடாக தோட்டங்களுக்கு அபிவிருத்தி செயல்திட்டம், மலையகத்திற்கான அதிகார சபை உருவாக்கம், தோட்டங்களுக்கு நவீன சிறுவர் பாடசாலை, தோட்டங்களுக்கு சுத்தமான குடிநீர் திட்டம் போன்ற உரிமை சார்ந்த விடயங்களை அரசாங்கத்திடம் அழுத்தங்களை கொடுத்து பெற்று கொடுத்தது.
கடந்த நான்கு வருடத்தில் இவ்வாறான செயற்திட்டங்களை பெற்றது போல் தற்போதைய அரசாங்கத்திடம் இவ்வாறான வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்கு அனைவரும் அணி திரள்வோம்.. எமது மறுமலர்ச்சிக்காவும் உரிமைக்காவும் ஒன்றுசேறுவோம்…” – என்றுள்ளது.










