இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை வருகின்றார்.
மலையக மக்களுக்கான நாம்200 நிகழ்வு உட்பட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே இன்று காலை அவர் இலங்கை வருகின்றார்.
இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்பி உள்ளிட்டவர்கள் அவரை விமான நிலையம் சென்று வரவேற்கவுள்ளனர்.
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்வு நாளை நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார். அவரது இந்த பயணத்தின்போது இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.










