மலையக மக்களுக்கான உரிமைகளைக்கோரி ஹட்டனில் கையெழுத்து வேட்டை…!

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஹட்டனில் நகரில் இன்று (23) ஆரம்பமானது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க கிளையான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

” மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ளன, எனினும், அவர்களின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு, உரிமைகள் தொடர்பில் எந்தவொரு அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்தியே கையெழுத்து திரட்டப்படுகின்றது.” – என்று ஏற்பாட்டுக்குழு அறிவித்தது.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ், செயலாளர் டி.எம். பிரேமந்திர, உப செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்டோரின் பங்கேற்புடன் கையெழுத்து வேட்டை ஆரம்பமானது.

இதன்போது கருத்து வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் கூறியவை வருமாறு,

” தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணிப் பிரச்சினை, வீட்டு பிரச்சினை, கல்வி, சுகாதாரப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை.

மாறாக தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவும் கொள்ளையடிக்கப்படுகின்றன.இதற்கு இடமளிக்க முடியாது. மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க எமது சங்கம் முன்னின்று செயற்படும்.” – என்றார்

Related Articles

Latest Articles