மாத்தளை, ரத்வத்த தோட்டத்தொழிலாளியின் தற்காலிக கூடாரத்தை தகர்த்தமை காட்டுமிராண்டித்தனத்தின் உச்சகட்டமாகும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இச்சம்பவம் மலையகத்தில் முதலும் இறுதியானதுமாக இருக்க வேண்டும்.
நவீன உழைப்புச்சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற மலையக பெருந்தோட்ட உழைப்பாளர்மீது அண்மைக்காலங்களாக மிக மோசமான வன்முறைகளும் பயமுறுத்தல்களும் அடாவடித்தனங்களும் மேற் கொள்ளப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சம்பந்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான மோசமான நிலை ஏற்படாதவாறு தடுத்து நிறுத்துவதற்கான நம்பிக்கைத்தரக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இருநூறு வருடங்களாக பொருளாதார ரீதியாக இந்த நாட்டை தாங்கிபிடித்துக் கொண்டிருக்கின்ற மலையக தமிழர்கள் இன ரீதியான ஒடுக்கு முறைகளுக்குள்ளாக்கப்படுவதோடு மலையக தமிழர்களின் ஒரு அங்கமான பெருந்தோட்டத் தொழிலாளர்களை இன ரீதியாக பாகுபாடுபடுத்தி தோட்ட நிர்வாக அதிகாரிகள் பல்வேறுபட்ட துன்புறுத்தல்களை மேற்கொண்டுவருகின்றனர்.
அதோடு வழங்கப்படும் ஊதியத்திற்கு மேலாக உழைப்பைச்சுரண்டுவதும் வீட்டுத்தோட்டங்கள் ஏனைய சுயதொழில்களை மேற்கொள்ளும்போது அதை தடுத்துநிறுத்துவதும் அவர்களுடைய EPF ETF போன்ற கொடுப்பனவுகளை சூடசுமமாக கொள்ளையடிப்பது தோட்டங்களை விட்டு வெளியேற்ற முனைவது போன்று பல்வேறு வகையில் தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்துவருகின்றனர் .
இது அந்த மக்களின் வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் அப்பட்டமான மனித உரிமைமீறலாகும் இதன் உச்சகட்டமாக குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக லயின் அறையில் வாழ முடியாத சூழ்நிலையில் மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரத்வத்த என்ற தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர் ஒரு தற்காலிக கூடாரம் அமைத்துக்கொண்ட நிலையில் அந்தக் கூடாரத்தை எவ்வித சட்ட வரம்புக்கும் உட்படாமல் வெறித்தனமாக உடைத்தெறியும் காட்டுமிராண்டித்தனத்தை சமூக ஊடகங்களில் காணகிடைத்தமை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நாட்டுக்கும் அந்த நிறுவனத்துக்கும் உழைத்துக்கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்திற்கு செய்யும் நன்றிக்கடன் இதுதானா?
என்று கேட்கத்தோன்றுகிறது
இது போன்ற அடாவடித்தனங்களை தடுத்து நிறுத்த மக்கள் ஒரு சமூகமாகவும் பாட்டாளி வர்க்கமாகவும் கைகோர்க்க வேண்டும் . பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தொழிற்சங்க பேதம் மறந்து அனைவரும் ஒன்றினைந்து உடனடியாக நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இது போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் ஒட்டுமொத்த மலையகத் தமிழர்களுக்கும் வாழ்விடம் அமைத்துக்கொள்வதற்கும் வாழ்வாதாரத்திற்குமான (பயிர்ச்செய்கை, சுயதொழில்) நிலவுரிமை உறுதிசெய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
