” இரட்டை வேடம் பூண்டுள்ள மலையக மக்கள் முன்னணியை தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து வெளியேற்றுவதற்கு அதன் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் வலியுறுத்தினார்.
ஜனநாயகத்துக்கு சாவுமணி அடித்து சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பி. தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு பங்காளிக்கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் அரவிந்தகுமாரை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையை மலையக மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ளது.
இதனை வன்மையாகக் கண்டித்துள்ள சிவநேசன், கூட்டணி கொள்கைக்கு எதிராகச்செயற்படும் மலையக மக்கள் முன்னணியை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கூட்டணியாக போட்டியிட்டதால்தான் பொதுத்தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளரால் வெற்றிபெற முடிந்தது என சுட்டிக்காட்டும் அவர், முடிந்தால் மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை காட்டுமாறும் சவால் விடுத்துள்ளார்.
அதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கம், முன்னணிக்குள்ள பலத்தை சிலர் பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாலும், கொள்கைமாறி செயற்படுவதாலும் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் முன்னணி தனித்து போட்டியிட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மலையக மக்கள் முன்னணியும் அதன் தலைவரும் இரட்டை வேடம் போடுகின்றனரா, அரச ஆசியுடன் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார் சிவநேசன்.
