” மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (02) திங்கட்கிழமை நீங்கப்படாது. எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு தொடரும்.” – என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன், அநாவசியமாக பொது வெளியில் நடமாடுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட பொலிஸ் பிரிவிலும், குருணாகலை நகர சபை பிரிவு மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளிலும் நாளை (02) காலை 5 மணி முதல் நவம்பர் 9 ஆம் திகதி காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையிலேயே அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.