ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. பஸில் ராஜபக்சவும் இதில் பங்கேற்றிருந்தார்.
கட்சியின் மாவட்ட தலைவர்களும், ராஜபக்சக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் பிரமுகர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
உள்ளாட்சிசபைத் தேர்தல், மேதினக் கூட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.
அவ்வேளையில் இம்முறை மே தினக் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலும் சில அரசியல் பிரமுகர்களும் ஆமாம் சாமி போட்டுள்ளனர்.
எனினும், இதற்கு பஸில் ராஜபக்ச பச்சைக்கொடி காட்ட மறுத்துள்ளார். தொகுதி மட்டத்தில் கூட்டங்களை நடத்தினால் போதும், பிரமாண்ட கூட்டங்கள் அவசியமில்லை. மக்களிடமும் பணம் இல்லைதானே….என பஸில் கூறியுள்ளார்.
பஸிலின் இந்த அறிவிப்பால் மஹிந்தானந்த கடுப்பாகினார் எனவும், அதற்கு பிறகு கூட்டத்தில் கருத்துகளை முன்வைக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.










