மைத்திரியை பொதுவேட்பாளராக களமிறக்கியது நான் இழைத்த வரலாற்று தவறு

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த வரலாற்றுத் தவறை நிவர்த்தி செய்யும் வகையிலும், கட்சியை சரியான பாதையில் முன்னெடுத்து செல்வதற்குமே, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, தாம் நீதிமன்றம் சென்றதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முறைப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்தவும் அதற்காக பங்களிப்பு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எவ்வாறெனினும் கட்சியின் தலைவர் பதவியை தாம் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் கல்விமான்கள் மற்றும் இளைய தலைமுறைக்கு முக்கிய பதவிகளை வழங்கி, கட்சிக்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்குவதுடன் கட்சியை சரியான பாதையில் பலம் மிக்கதாக கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும், இது இலகுவான காரியமல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு எந்த ஒரு தேவையும் எமக்குக் கிடையாது. அதேபோன்று தமது புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் சம்பந்தப்படுத்தப் போவதில்லை. குடும்ப அரசியலுக்கு, தாம் எதிரானவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles