உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கடைசி இரு நொக் அவுட் போட்டிகளிலும் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்து மொரோக்கோ அணியும் சுவிட்சர்லாந்தை துவம்பசம் செய்து போர்துக்கல் அணியும் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன.
இதன்படி மொரோக்கோ மற்றும் போர்த்துக்கல் அணிகள் வரும் சனிக்கிழமை (10) காலிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதில் கடந்த செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற ஸ்பெயினுக்கு எதிரான 16 அணிகள் சுற்றில் மொரோக்கோ அணி பெனால்டி சூட் அவுட் முறையில் 3–0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. போட்டியின் முழு நேரம் மற்றும் வழங்கப்பட்ட அரை மணி மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் கோல் பெற தவறின.
முடிவை தீர்மானிக்கும் பெனால்டி சூட் அவுட்டில் முன்னாள் உலக சம்பியனும் பலம்மிக்க அணியுமான ஸ்பெயின் ஒரு ஸ்பொட் கிக்கைக் கூட வலைக்குள் செலுத்தவில்லை. பப்லோ சரபி, கார்லொஸ் மற்றும் செர்கியோ புக்குட் உதைத்த பெனால்டி சூட் அவுட்களை மொரோக்கோ கோல் காப்பாளர் யாசின் பவுனு அபாரமாகத் தடுத்தார்.
இதன்மூலம் மொரோக்கோ அணி உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது.
இதேவேளை இலங்கை நேரப்படி நேற்று (07) அதிகாலை நடைபெற்ற சுவிட்சர்லாந்துக்கு எதிரான நொக் அவுட் போட்டியில் நட்சத்திர வீரர் ரொனால்டோவை இருக்கையில் அமர வைத்து களமிறங்கிய போர்த்துக்கல் 6–1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியீட்டியது. ரொனால்டோவுக்கு பதில் களமிறக்கப்பட்ட 21 வயது கன்காலோ ராமோஸ் ஹட்ரிக் கோல் புகுத்தினார்.
2006இல் ஜெர்மனியில் நடந்த உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் போர்த்துக்கல் அணி நொக் அவுட் போட்டியில் வெல்வது இது முதல் முறையாகும்.










