இன்றையதினம் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மேல், தென், வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடல் பகுதிகளில்
புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கி.மீ. வரை காணப்படும்.
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55-65 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
சிலாபம் முதல் கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலுமான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சுமார் 2.0–3.0 மீற்றர் வரை (இது நிலத்திலிருந்தான உயரம் அல்ல) அதிகரிக்கக்கூடும்.
இது தொடர்பாக கடல்சார் மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக் கூடும்.