இலங்கையின் நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி செனரத் , ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (19) முற்பகல், காமினி செனரத்திடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை நிர்வாகச் சேவையில் விசேட தர அதிகாரியான காமினி செனரத் , ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மேலதிகச் செயலாளராகவும் பணிக்குழாம் பிரதானியாகவும், 2004 – 2005, 2019ஆம் ஆண்டுக் காலப்பகுதிகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் பிரதமரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஹக்மன மெதடிஸ் கல்லூரி, மாத்தறை ராஹுல மற்றும் காலி ரிஷ்மன்ட் கல்லூரிகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி பயின்றுள்ள செனரத் , களனி பல்கலைக்கழகத்தில் முதல் பட்டத்தைப் பெற்று, இலங்கை நிர்வாகச் சேவையில் இணைந்துகொண்டார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணினித் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுள்ள அவர், ஐக்கிய இராச்சியம், ஜப்பான், சிங்கப்பூர், பாகிஸ்தான், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் பயிற்சிப் பாடநெறிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவிகளை வகித்துள்ள செனரத் அவர்கள், மக்கள் வங்கி, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லிட்ரோ கேஸ் நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குத் தலைமைத்துவம் வகித்துள்ளார்.
இந்நிலையில், பிரித் பாராயணத்துக்கு மத்தியில் காமினி செனரத் அவர்கள் இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்தார்.










