யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து 56 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய ஆளுகைக்குள் இருக்கும் அனலைதீவு 5 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் சுப்பையா நளினி என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் தொடரும் அசாதாரண காலநிலையைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பல்வேறு அவலங்களைச் சந்தித்து வரும் நிலையில் நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன.
இவ்வாறு நிகழ்ந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.










