யாழில் 300 பவுண் நகைகளைத் திருடிய பிரதான சந்தேகநபர் கொழும்பில் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்ட பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரண்டு வருடங்களாகச் சைக்கிளில் முகத்தை மறைத்துச் சென்று நூதனமாக நகைகளைத் திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாகத் தேடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் கொழும்பில் தலைமறைவாக இருந்தபோது இந்திக்க தலைமையிலான யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். இதன்போது சந்தேகநபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடினார்.

சந்தேகநபரிடம் இருந்து 90 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேகநபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பிரதான சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles