‘யாழ் நிலா’ கடுகதி ரயில் சேவை ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் ஆரம்பம்

வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் வடக்குக்கு மேலும் ஒரு புதிய ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அந்த ரயில் சேவை எதிர்வரும் 04 முதல் நல்லூர் கந்தன் உற்சவத்தை மையப்படுத்தி ஆரம்பமாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த சுற்றுலா ரயிலில் ஆசனங்களை பதிவுசெய்வதற்கு 4,000 ரூபா அறவிடப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

கடந்த ஒரு வருட காலமாக ரயில்வே திணைக்களத்தை கட்டியெழுப்புவதற்கு பாரிய பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், சிறு சம்பவமொன்றை அடிப்படையாக வைத்து பெருமளவு மக்களை அசௌகரியங்களுக்குட்படுத்தும் வகையில் ரயில்வே வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டில் பெருமளவு மக்கள் ரயிலிலேயே பயணம் செய்கின்றனர். அந்தவகையில் பொதுப் போக்குவரத்துக்கு ரயில் சேவைகள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன. எனினும், ரயில் தொழிற்சங்கத்தினர் சடுதியாக வேலைநிறுத்தப் போராட்டத்துக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் போது, மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்கிறது.

பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமென்று நான் தொழிற்சங்கத்திடம் கூறியுள்ளேன். அமைச்சின் அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வுபெற்றுத் தராவிட்டால், அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

வடக்குக்கான ரயில் சேவைகள் வழமைபோன்று நடைபெறுகின்றன. அதேபோன்று எல்ல ஓடிசி மற்றும் சீதாவக்க ஓடிசி ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அந்தவகையில் புதிய ரயில் சேவையொன்றை வடக்குக்கு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles