கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ ஒப்பந்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேற்படி விவகாரம் தொடர்பான மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
இதன்போதே எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகள் விசாரணைக்கான தினங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யுகதனவி ஒப்பந்தத்துக்கு ஆளுங்கட்சியில் உள்ள பங்காளிக்கட்சிகளே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியினர், ஜே.வி.பியினர் உட்பட மேலும் பல தரப்பினரே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










