இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்ஸன்கோனர் தோட்டப்பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (19) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் வைத்திருந்த விலையுயர்ந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரம் உட்பட விவசாய பொருட்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்கள் என திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் மூவரை இராகலை பொலிஸார் நேற்று (20) காலை கைது செய்துள்ளதுடன் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து ஒரு சில திருடப்பட்ட பொருட்களும் இராகலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் திருட்டு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் நுவரெலியா தடயவியல் பொலிஸார் இரசாயன பகுப்பாய்வும் மேற்கொண்டதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.










