வடக்கில் குல (ஜாதி) ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். முதலில் அவர் வெள்ளாளர் தலைவரான அமிர்தலிங்கத்தையே சுட்டுக்கொன்றார் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளவை வருமாறு,
” வடக்கில் பிரபாகரனுக்கு முன்னரும் இருவர் ஆயுதம் ஏந்தியுள்ளனர். அவர்களிடம் ஒருமித்த நோக்கமொன்று இருந்தது. வடக்கில் இருந்த குல (ஜாதி) ஆதிக்கத்துக்கு எதிராகவே அவர்கள் செயற்பட்டனர். வேறு எதற்காகவும் அல்ல.
1901 இல் எதற்காக தேசவழமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது? வடக்கில் உள்ள குல (ஜாதி) முறைமையை சட்டமாக்கிதருமாறு கோரி இங்கிலாந்துசென்று, வெளிவிவகார செயலாளரிடம்
பொன்னம்பலம் ராமநாதன் மூன்று தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார். மூன்று முறையும் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னரே தேசவழமைச்சட்டத்தையாவது அமுல்படுத்தி தருமாறு கோரினர்.
இந்த சட்டத்தின்படி, என்னிடம் ஒரு காணி இருந்தால் அதை எனக்கு தேவையானருக்கு விற்க முடியாது. இதை வாங்குகின்றீர்களா என சூழ உள்ளவர்களிடம் கேட்க வேண்டும். வெள்ளாளர்களிடம் இருந்து ஏனையவர்களுக்கு காணி சென்றுவிடக்கூடாது என்பதால்தான் இதனை கொண்டுவந்தனர். சட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் அதுவே.
இவ்வாறான குல (ஜாதி) அழுத்தத்தால்தான் – அதனை உடைப்பதற்காக பிரபாகரன் உருவாகினார். மாறாக சிங்கள மக்களை கொல்வதற்கு உருவாகியவர் அல்லர் அவர். பிரபாகரன் முதன்முதலில் துரையப்பாவையே கொலை செய்தார். எங்கு வைத்து அவரை கொன்றார்? கோவிலுக்குள் வைத்துதான் இந்த சம்பவம் இடம்பெற்றது.
சிங்கள மொழியை அரசமொழியாக்கியதால்தான் பண்டாரநாயக்கமீது தமிழ் மக்களுக்கு வைராக்கியம் ஏற்பட்டது என கூறப்பட்டது. வைராக்கியம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். ஆனால் ஒரு வருடத்துக்குள் பிரச்சினை தீர்க்கப்பட்டது. முஸ்லிம் மக்களின் தாய்மொழியும் தமிழ்தான். ஆனால் முஸ்லிம் தரப்பில் இருந்து ஏன் எதிர்ப்பு வரவில்லை? உண்மையான காரணம் இதுதான்.
சமூகபாகுபாடுகளை தகர்க்கும் சட்டமூலத்தை 1957 இல் பண்டாரநாயக்க கொண்டுவந்தார். பொது இடங்களுக்கு செல்வதாக இருந்தால்கூட அனுமதி பெற வேண்டியிருந்தது. இந்த சட்டம் வந்த பிறகுதான் வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய பகுதிகளில் வெள்ளாளர் அல்லாதவர்களுக்கு கோவில்களுக்குள் செல்லக்கூடிய வாய்ப்பு கிட்டியது.
வவுனியாவில் சீ. சுந்தரலிங்கம் என்ற எம்.பி. இருந்தார், 2ஆம் எலிசபெத் மகாராணிக்கு கணிதபாடம் கற்பித்தவர். அவருக்கு வவுனியாவில் கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவிலுக்குள் பாகுபாடு காட்டப்பட்டது. வெள்ளாளர் அல்லாதவர்கள் வழிபாட்டுக்கு சென்றபோது தாக்கினார். சட்டத்தின் பிரகாரம் குற்றவாளியானார். இதனால்தான் பண்டாரநாயக்கமீது வைராக்கியம் ஏற்பட்டது. ஆனால் இதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
தமிழ் மக்களின் நிலைப்பாடு என்னவென்பது எமக்கு தெரியும். அருண் சித்தார்த்தனின் உரையை ஆராயுங்கள். யாழ்ப்பாணத்தின் யதார்த்தபம் பற்றி கதைக்கின்றார். பிரபாகரன் வெள்ளாள தலைவர்களை கொலை செய்தார். இயக்கத்தில் இருந்த மாத்தையாயும் வெள்ளாளர் அவருக்கு என்ன நடந்தது? பிரபாகரன் மூன்றாவது தலைமுறை. அவருக்கு முன்னரும் இருவர் போடியுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.” – என்றார்.










