“வடக்கு மக்கள் நீதியை எதிர்பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே தேசிய மக்கள் சக்திக்கு ஆணை வழங்கினர். அம்மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்.” – என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்குரிய முயற்சிகள் தொடரும். இது விடயத்தில் கடந்தகால அரசுகளைவிட எமக்கே கூடுதல் பொறுப்பு உள்ளது. கடந்த வரவு- செலவுத் திட்டத்தில்கூட வடக்குக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை.
காணாமல்ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். எமது பிரச்சினையை அரசாங்கம் உணர்ந்துள்ளது, எனவே, நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டால்தான் பிரச்சினைகள் முழுமையாக தீரும். அதற்குரிய நடவடிக்கையையே நாம் முன்னெடுத்துவருகின்றோம்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.










