ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் இணைந்து செயற்பட தயாரெனில் அது தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தயார் – என்று மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களை மொட்டு கட்சி கூட்டணியில் இணைத்து கொள்வதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் உதவியை, பஸில் ராஜபக்ச நாடியுள்ளார் என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவுதும் தெரியாது. ஆனால் கட்சி என்ற ரீதியில் , எம்மில் இருந்து விலகிச்சென்றவர்கள் மீண்டும் இணையத் தயாரெனில் அது தொடர்பில் பேச்சு நடத்தி, பிரச்சினைகளை தீர்க்க தயாரென நாம் ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியென்பது நாட்டு மக்களை நேசிக்கும் கட்சியாகும். நாட்டை மீட்ட தலைவரே கட்சிக்கு தலைமைத்துவம் வழங்குகின்றார். எனவே, நாட்டை நேசிக்கும் கட்சிகள் எம்முடன் இணைந்து செயற்படலாம். “ – என்றார்.










