” நாட்டில் தென்னை வளங்களில் 80 சதவீதமானவற்றை ஒரு வகையான வெள்ளையின ஈக்கள் தாக்கியுள்ளமையால் இன்னும் சில நாட்களில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் சூழல் தோன்றியுள்ளது.” – என்று தென்னை அபிவிருத்தி சபையின் மத்திய மாகாண பிரிவு முகாமையாளர் வசந்த குமாரசிறி பமுனு கொங்கே தெரிவித்தார்

மத்திய மாகாணத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள தென்னை மரங்களை வெள்ளை ஈ தொற்றுதலில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக விசேட வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு கம்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” நாட்டின் தென்னை உற்பத்தி அதிகமாக காணப்படும் வடமேல் , தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கமானது அசுர வேகத்தில் பரவி உச்சத்தை தொட்டுவிட்டது.
இரண்டு சென்றி மீற்றர் அளவைக்கொண்ட இந்த சின்னஞ்சிறிய வெள்ளை ஈயானது தென்னை ஓலைகளின் கீழ் தங்கி தென்மரத்தினை தாக்க ஆரம்பிக்கின்றது. மிக விரைவில் அது மரத்தினை ஆக்கரமித்து வலுவிழக்கச் செய்து விடுகிறது. இதனால் தற்போது தேங்காய் உற்பத்தி குறைவடைந்து, அதன் விலை 120 முதல் 130 ரூபாவரை உயர்ந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அது மேலும் பன்மடங்காக அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
அதனை தடுக்கும் விதமாகத் தான் தென்னை அபிவிருத்தி சபையினூடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதன் ஒரு கட்டமாகத்தான் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மிக குறைந்த செலவில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேப்பெண்ணைய் மற்றும் சவக்கார பவுடரினையும் கலந்து தெளிக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்துகின்றோம். அதற்காக இப்பிரதேச தெங்கு உற்பத்தியாளர்களுக்கு 45 தெளிக்கருவிகள் வழங்குகின்றோம்.
மேலும் உங்கள் வீட்டுத்தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களின் தாக்கம் தென்பட்டால் அருகில் உள்ள தென்னை அபிவிருத்தி சபை அதிகாரிகளை உடனடியாக நாடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.










