கிழக்கு மாகாணத்தின் அமைதிக்காக செயற்படும் துணிச்சல் மிக்க ஆளுநராக செந்தில் தொண்டமான் செயற்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
மக்களின் உணர்வுகளை உசுப்பேத்தி அதன் மூலம் அரசியல் அறுவடைச் செய்வதே இலங்கையின் அரசியல் கலாச்சாரமாக இருந்து வந்து கொண்டிருக்கிறது. நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் இனரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாகவே நாடு இன்று இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாகும்.
நாட்டை குழப்பகரமான சூழ்நிலையில் வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதே சில அரசியல் மனநோயாளர்களின் நோக்கமாகும். இவ்வாறான அரசியல்வாதிகள் மூவின சமூகத்திலும் பொதுவாக ஆங்காங்கே காணப்படுகின்றனர். அந்த வகையில் இதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை பிரித்து பார்க்க முடியாது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அண்மைய காலங்களில் எடுத்து வருகின்ற நடவடிக்கை தொடர்பில் மாகாண மக்கள் மத்தியில் பொதுவாக ஆதரவு காணப்படுகிறது. தேவையற்ற இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தமிழ் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் என்பதனால் நடவடிக்கை எடுத்த போது தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும் ஆளுநராக பார்த்தவர்கள். இன்று அனுமதி பெறாமல் பாதுகாப்பற்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சிங்கள கிராமங்களை ஊடறுத்து ஊர்வலம் செல்லுகின்ற போது சிங்கள மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டு அதன் மூலம் எதிர் விளைவுகளை எதிர் நோக்கினார் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் போது சிங்கள மக்களுக்கு ஆதரவான ஆளுநராக பார்க்கின்றார் .
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் காணிகளில் மாற்று இனத்தவர்கள் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படுகின்ற போது முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான ஆளுநராக பார்க்கின்றனர். ஆனால் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற எல்லா இனங்களுக்கும் சமமான அந்தஸ்தை வழங்கி இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக கிழக்கு மாகாணத்தை தனது பதவி காலத்தில் கட்டி எழுப்ப வேண்டும் என்பதே ஆளுநர் செந்தில் தொண்டமானின் நோக்கமாக காணப்படுகிறது. இது இனங்களைக் குழப்பி விட்டு அரசியல் நடத்துகின்ற அரசியல்வாதிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறான மனநோயாளர்களின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் கிழக்கு மாகாண மக்களின் அமைதிக்காக ஆளுநர் செந்தில் தொண்டுமான் செயல்பட்டு வருகிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் குறுகிய அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் உணர்வுகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் முதுகெலும்பு உள்ளவராக இருந்தால், வடக்கு கிழக்குக்கு சென்று திலீபனின் நினைவு தின ஊர்வலத்தை நடத்த வேண்டுமே தவிர பாராளுமன்றத்திலும் பத்திரிகைகளிலும் விளம்பரம் தேட முற்படக்கூடாது. மாறாக மாற்றுக் கட்சியினரின் அரசியல் நடவடிக்கைகளில் காழ்புணர்ச்சி கொண்டு வேண்டத்தகாத விமர்சனங்களை முன் வைத்தாள் அதற்கு கண்டி மாவட்ட மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இலங்கை வரலாற்றில் முதல் முதலாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சார்ந்த ஆளுநராக செயல்படுகின்றார். எமது சமூகத்தை சார்ந்த ஒருவர் இவ்வாறான உயர் பதவி வகிப்பதை குறுகிய அரசியலைக் கடந்து உற்சாகமளிக்க வேண்டியது மலையகக் கட்சிகளின் தார்மீக கடமை ஆகும். இவ்வாறான விடயங்களில் எம்மிடையே ஒற்றுமை காணப்படாவிட்டால் இவ்வாறு ஒன்றுபட்டு மலையகத்தை கட்டி எழுப்பப் போகின்றோம் என்பதை வேலு குமார் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்
வேலு குமார் செந்தில் தொண்டமான் தொடர்பாக வெளியிட்ட கருத்தை மீள பெற்று நேர்மையாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவரும் முன்னாள் uமத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொகவந்தலாவ நிருபர்
