ஹட்டன் – றொசல்ல, குருவத்தை தோட்டப்பகுதியில் வாழும் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல தசாப்தங்களாகத் தமக்குரிய அடிப்படைப் போக்குவரத்துப் பாதையின்றிப் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றன.
மக்களின் நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாகத் தற்போது வீதியின் ஒரு சில பகுதிகளில் சிறியளவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பிரதானமான 6 கிலோமீட்டர் பாதையும் முழுமையாகச் சீரமைக்கப்படாமல் அரைகுறையாகவே கைவிடப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் பேருந்தைப் பிடிப்பதற்கும், பக்கத்து ஊர்களுக்குச் செல்வதற்கும் மற்றும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கும் ஆபத்தான ஒற்றையடிப் பாதைகளையே இன்னமும் பயன்படுத்த வேண்டியுள்ளது.
குறிப்பாக, அவசர மருத்துவத் தேவைகளின் போது கர்ப்பிணித் தாய்மாரையும் நோயாளிகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் கடும் சிரமம் நிலவுகிறது. அத்துடன், பாதையின் மோசமான நிலையால் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, தங்களது நலன் கருதி இந்த 6 கிலோமீட்டர் தூரப் பாதையை முழுமையாகப் புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.










