நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி கண்டன பேரணியும், கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட ஹேவாஹெட்ட , ஹோப் தோட்டத்து மக்கள் ஒன்றிணைந்தே நேற்று இதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.
தோட்ட பெண்கள், சிறார்கள், தோட்டத் தலைவர்கள், கல்விமான்கள் என பலரும் இணைந்து பேரணியாக போராட்டத்தை ஆரம்பித்தனர். ஹிஷாலினிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தப்பவே கூடாது, இனியும் இவ்வாறு நடைபெறக்கூடாது எனவும் கோஷம் எழுப்பினர்.
அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் ஒரு கட்சியின் தலைவரும்கூட. அப்படி பொறுப்பு வாய்ந்த ஒருவர் எவ்வாறு சிறுமியை வேலைக்கு அமர்த்த முடியும், இந்த சம்பவத்தின் பின்புலம் கண்டறியப்பட வேண்டும். உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இப்படியான சம்பவம் மீள இடம்பெறாததை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களும் அவசியம் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.