அகரவத்தை – லொனக் பிரதான பாதையை உடனடியாக புனரமைக்குமாறு கோரிக்கை

அகரவத்தை தொடக்கம் லொனக் வரை சுமார் 4 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான பாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பாதையை நம்பி வாழும் சுமார் 750 குடும்பங்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் அமைந்துள்ள மமா/ஹட்/லொனக் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 250 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் 15 ஆசிரியர்கள் போக்குவரத்து சவால்களுக்கு மத்தியில் தங்களது கல்விச் சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கி வருகின்றனர்.

பாதையின் மோசமான நிலை காரணமாக , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக கடும் சிரமங்களை எதிர்கொள்வது, அவசர மருத்துவ மற்றும் பிற சேவைகள் பாதிக்கப்படுவது, பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் தடைபடுவது, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) பேருந்து சேவை இயங்காத நிலை

மேலும், ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான A7 பாதையில் மண்சரிவு, பாதைச் சீர்கேடு, மர முறிவு அல்லது பிற அவசர நிலைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாற்றீட்டு பாதையாக பயன்படுத்தப்படும் முக்கியமான பாதை இதுவாகும். எனினும், தற்போது இந்த பாதையும் மோசமான நிலையில் காணப்படுவதால், அவசர காலங்களில் போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

இந்த பாதை உள்ளூர் மக்களுக்கு மட்டுமன்றி, அவசர காலங்களில் பிராந்திய போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இதன் புனரமைப்பு காலத்தின் அவசியமாகும்.

சம்பந்தப்பட்ட அமைச்சுகள், சாலை அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் பொறுப்புடைய அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, அகரவத்தை – லொனக் பிரதான பாதையை விரைவாக புனரமைத்து, மக்களின் போக்குவரத்து, கல்வி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles