” அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்கள்மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அடுத்த தேர்தலில் மொட்டு கட்சி மீண்டெழும் என்பதாலேயே அரசியல் ரீதியில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அச்சுறுத்தல்மூலம் அரசியலை முன்னெடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தியினர் முயற்சிக்கின்றனர். அதனால்தான் மேடையமைத்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன. என்னை சிறையில் அடைப்பதன்மூலம் நாட்டுப் பிரச்சினைகள் தீருவாயின் சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை.
எவரேனும் தவறிழைத்திருந்தால் தண்டனை வழங்குவது பிரச்சினை இல்லை. ஆனால் அரசியல் ரீதியில் ஒடுக்கி, அச்சுறுத்தி, திணறவேண்டாம் என மிரட்டி, பாதுகாப்பு குறைக்கப்படும் எனக் கூறி அரசியல் நடத்த முற்படுவது வங்குரோத்து அரசியலாகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அடுத்த தேர்தலில் பலமான சக்தியாக மாறும் என்பது ஆளுங்கட்சியினருக்கு தெரியும். அதனால்தான் நாம் இலக்கு வைக்கப்பட்டுள்ளோம்.” – என்றார்.










