ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறும்போது, அந்நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறக்கூடும். அதே நேரத்தில் அமைதியான அணுசக்திக்கான அதன் உரிமையை நிலைநிறுத்த உறுதியுடன் உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை. ஆனால், அணுசக்தி மற்றும் ஆராய்ச்சிக்கான அதன் உரிமையைப் பின்பற்றும். பேரழிவு ஆயுதங்களுக்கு எதிரான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மத ஆணையை பின்பற்றுவோம்” என்றார்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்பது அணு ஆயுதங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்டது ஆகும். மேலும், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அணு ஆயுதக் குறைப்பு மற்றும் முழுமையான உலகளாவிய ஆயுதக் குறைப்பு இலக்கை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர ஐந்து உறுப்பினர்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை அணு ஆயுத நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற நாடுகள் தங்கள் சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கிய பிறகு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1970-இல் நடைமுறைக்கு வந்தது, 1995-இல் இது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.
ஐ.நா. தரவுகளின்படி, மொத்தம் 191 நாடுகள் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஈரான் 1970-இல் அதன் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் அணு ஆயுதங்களைக் கைவிட்டு, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) ஒத்துழைத்த பிறகு சிவில் அணுசக்தியைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன.
அணு ஆயுதத்தை உருவாக்குவதற்குத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிய 2018-ஆம் ஆண்டு முதல் ஈரானின் அணுசக்தி திட்டம் வேகமாக முன்னேறி வருகிறது. அப்போது முதலே அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாகவும், ஐஏஇஏ உடன் ஒத்துழையாமைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரான் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளோ ஈரான் அணுகுண்டை உருவாக்க நெருங்கிவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதாகக் கூறி, அந்த நாட்டின்மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில், இரு நாடுகள் இடையே இன்று 4-வது நாளாக போர் நீடித்துள்ளது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. அதேபோல், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற திட்டமிட்டு இருப்பது, அணு ஆயுதப் போருக்கு வித்திடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.