உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார்? இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையை நடத்தி மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கப்படும், களவாடப்பட்டுள்ள நிதி மற்றும் சொத்துகள் மீளப்பெறப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. மேடையமைத்து கோவைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்து 158 நாட்களுக்கு மேலாகிவிட்டன. பதவிகாலத்தில் 10 சதவீதம் முடிந்துவிட்டது. ஆனால் மேற்படி விடயங்களை நிறைவேற்றுவதற்குரிய சட்டமூலம்கூட இன்னும் முன்வைக்கப்படவில்லை. கொள்ளையர்களை கண்டுபிடியுங்கள். அதற்கான சட்டங்களை கொண்டுவாருங்கள். அதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றியும் கதைக்கப்பட்டது. ஆனால் மகேந்திரனை ரணில் விக்கிரமசிங்கதான் கொண்டுவர வேண்டும் என ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர்.
லசந்த விக்கிரமதுங்க, சிவராம், தாஜுடின் போன்றவர்களின் கொலை தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன? இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இது விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
பிரதான சூத்திரதாரி பற்றியும் கதைக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யார்? இதனை முதலில் கூறுங்கள். முறையான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுங்கள்.” – என்றார்.










