அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கும்போது பாரிய கல் இருப்பதாகக் கூறி விமர்சனங்களை முன்வைத்த தேசிய மக்கள் சக்தியினர், இன்று அந்த துறைமுகத்துக்காக சீனாவில் இருந்து பாரிய முதலீட்டை கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான முதலீடுகள் தொடர்பில் அன்று நாம் பேச்சு நடத்தியபோது அதற்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அன்று கடும் விமர்சனங்களை முன்வைத்தார். துறைமுகத்தில் பாரிய கல் இருப்பதாகவும் கூறினர். இலங்கையை சீனாவின் கொலனியாக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.
அன்று அவ்வாறு விமர்சித்த துறைமுகத்துக்காக இன்று பாரிய முதலீடுகளை கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதை நாம் வரவேற்கின்றோம்.
அநுர அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் அபிவிருத்தி திட்டங்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை.
உள்ளாட்சிசபைத் தேர்தலில் நாம் அனைத்து சபைகளுக்கும் போட்டியிடுவோம். தனித்தும், கூட்டணி அமைத்தும் களமிறங்குவோம்.” – என்றார்.










