அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொங்கலன்று பொதுமன்னிப்பு – மனோ கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டுமென மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் நேற்று கேட்டுக்கொண்டார்.

கடந்த தீபாவளியின் போது எட்டு பேரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தது போன்று எதிர்வரும் தைப்பொங்கல் தினத்திலும் மேலும் சிலரை விடுதலை செய்யுமாறு நாம் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோமென சபையில் சுட்டிக்காட்டிய அவர், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தெரிவிக்கும்போது, இன்னும் 40 பேரே அவ்வாறு சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பான விசாரணைகள் சம்பந்தமாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை கட்டம் கட்டமாக அல்லாமல் ஒரே தடவையில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அத்தகைய நம்பிக்கையளிக்கும் நடவடிக்கைகள் மூலமே தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles