அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவை வழங்குவது சவாலாக அமைந்திருந்தது. அந்த வகையில் தற்போது மாணவர் ஒருவருக்காக ஒதுக்கப்படும் தொகையை 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் பெருமளவான மாணவர்கள் போசாக்கு குறைப்பாட்டிற்கு ஆளாகியுள்ள நிலையில் புரோட்டின் நிறைந்த போசாக்கான உணவை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமையவே நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாகவும், தோட்ட பாடசாலைகள் தவிர்ந்த பாலர் பாடசாலைகளில் மட்டும் 120,000 மாணவர்கள் இருப்பதாகவும் தோட்ட பாலர் பாடசாலைகளிலிருக்கும் 35,000 மாணவர்களும் உள்ளடங்களாக 155,000 மாணவர்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார்.

அதேபோல் கர்பிணித் தாய்மாருக்கான போசாக்குப் பொதிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்காக 220,214 கர்பிணித் தாய்மாருக்கு 4,500 பெறுமதியான போசாக்கு பொதிகளை 10 மாதங்களுக்கு வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பாலர் பருவகால மேம்பாடு தொடர்பிலான தேசிய செயலாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் 18,333 பாலர் பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பாலர் பாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவாக மாதாந்தம் 2500 ரூபாயினை வழங்கவும், அது போதுமான தொகை இல்லை என்பதால் அதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு 03 புதிய சட்டங்களை கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் பெண்கள் வெளிநாடு செல்லும் போது குழந்தையின் வயது குறைந்தபட்சம் 5 ஆக கருத்தில் கொள்ளப்படும் என்றும், 05 வயதுக்கு குறைவான குழந்தைகளிருக்கும் எத்தனை தாய்மார் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலக மட்டத்தில் தேடியறிவிருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles