அமசோனுக்கு எதிராக செந்தில் போர்க்கொடி

இலங்கையின் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் உற்பத்திகளை இணையவழி விற்பனைக்கு விட்டுள்ள அமெரிக்காவின் வொஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் அமசோன் நிறுவனத்தின் செயற்பாடுகளை, இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய கொடியைக் கால் துடைப்பானாகவும் அக்கொடியின் சின்னம் அடங்கிய செருப்புகளையும் விற்பனை செய்வதற்கான புகைப்படங்களைத் தனது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ள அமசோன் நிறுவனம், குறித்த பொருள்களுக்கான விலைகளையும் அதில் காட்சிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ள செந்தில் தொண்டமான், “உலகின் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனமாகிய அமசோன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ விற்பனை தளத்தில் இலங்கையின் தேசியக் கொடி இவ்வாறு அவமதிக்கப்படுவதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ மன்னிக்கவோ முடியாத குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

“இணையவழி விற்பனையை முன்னெடுத்துவரும் மேற்படி நிறுவனம், இலங்கையின் தேசிய கொடியிலான கால் துடைப்பான்களை, சிங்கப்பூரிலிருந்தே உலகம் முழுவதுக்கும் விநியோகித்து வருகின்றது. இலங்கையில் இந்த கால்துடைப்பான்களை விநியோகிப்பதற்காக, 9.20 அமெரிக்க டொலர்களை, கப்பல் கட்டணமாகவும் அறவிடுகிறது.

“12 இலட்சத்து 98 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டு, வருடமொன்றுக்கு 21 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டிவரும் இவ்வாறானதொரு நிறுவனம், ஒரு நாட்டின் தேசிய சின்னங்களை அவமதிக்கும் வகையில் இவ்வாறான உற்பத்திகளை விற்பனைக்கு விடுவது கண்டனத்துக்குரியது” என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்த நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் செயற்பாடு மாத்திரமின்றி, நாட்டு மக்களுடைய மனங்களையும் புண்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளதெனவும் தெரிவித்துள்ள அவர், உடனடியாக அந்நிறுவனத்தின் செயற்பாடுகளை இலங்கையில் முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அமசோன் நிறுவனத்தின் மீது, இலங்கை அரசாங்கம் மானநட்ட வழக்குத் தொடரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles