இலங்கையின் அரசியல் தலைவர்களில் மக்கள் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள ஒருவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் திகழ்கின்றார்.
கொள்கையில் தெளிவு, நெஞ்சிலே துணிவு, செயலிலே வேகம், ஓயாத உழைப்பு, தளராத நம்பிக்கை ஆகிய ஐந்து அம்சங்களைக் கொண்டவராக அமரர் தொண்டமான் விளங்கினார்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்டவர் அவர். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 111ஆவது (30.08.2024) பிறந்ததினம் இன்றாகும்.
மலையக பெருந்தோட்டத்துறை மக்கள் அன்றைய அரசாங்கங்களாலும் தோட்ட நிர்வாகங்கள் மற்றும் கம்பனிகளாலும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டனர். பாகுபாடுகள், பாரபட்சங்கள், ஒடுக்குமுறைகள், பழிவாங்கல் ஆகியவை இந்த இரு தரப்புகளால் கடைப்பிடிக்கப்பட்டன.
இதேவேளை பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் திடீர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். தோட்டங்களில் இருந்து விரட்டப்பட்டனர். அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. இந்நிலையில் தொழிலாளர் சமூகம் நசுக்கப்படுவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து அக்காலத்தில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
1946 ஆம் ஆண்டு நடைபெற்ற உருளவள்ளி தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்துடன்தான் தொண்டமான் அவர்களின் போராட்ட வரலாறு ஆரம்பமானது. மடக்கும்புர, மடுல்கலை, கலாபொக்க போராட்டங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அமரர் தொண்டமானின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டங்களின் பயனாக ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கம் சமசம்பளம் வழங்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டு மாபெரும் பிரார்த்தனை இயக்கத்தினையும், மௌனப் போராட்டத்தையும் ஆரம்பித்து நாடற்றவர்கள் என்று கருதப்பட்ட இலங்கைவாழ் இந்திய வம்சாவளியினர் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுக் கொடுத்தவர் இ.தொ.காவின் மறைந்த தலைவர் அமரர் தொண்டமான் ஆவார்.
அவரது போராட்டங்களின் பயனாக வரட்சிக் காலத்திலும், மழைக் காலத்திலும் சம்பளத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அதேவேளை ஒரு நாள் பேருக்கு எடுக்கப்பட வேண்டிய கொழுந்தின் எடையிலும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை.
ஒரு நாள் பேருக்கு 25 தொடக்கம் 30 இறாத்தல் கொழுந்து பறிக்கப்பட வேண்டும் என விதிமுறை கொண்டு வந்தார்கள். இதே போன்று பல தோட்டங்களிலும் ஒரு நாள் பேருக்கு எடுக்கப்பட வேண்டிய எடையை ஒரே விதமாக கொண்டிருக்கப்படவில்லை. அவற்றில் சில தோட்டங்களில் ஒரு நாள் பேருக்கு கூடுதலான கொழுந்தை பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் நிர்ப்பந்தித்தது. குறைவாக பறிக்கப்பட்ட கொழுந்திற்கு அரை பேர் போடப்பட்டது. தோட்ட நிர்வாகங்கள் ஒரு நாள் பேருக்கு கொழுந்தின் எடையை தங்களின் இஷ்டப்படி நிர்ணயித்ததின் விளைவாக பலர் கஷ்டப்பட்டும் முழுப்பயனை அடையவில்லை.
கடைசி காலத்தில் தேயிலைகள் கருகி கொழுந்துகள் குறைந்து விடுகின்றன. இந்த சமயத்தில் அதே நிர்ணயிக்கப்பட்ட எடையை எதிர்பார்க்க முடியாது. அதற்காக தோட்ட நிர்வாகங்கள் கொழுந்தின் எடையில் கடும் வரட்சிக்காலத்தில் ஒரு மாற்றத்தை புகுத்தவில்லை.
இந்த விதமான தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகளின் மத்தியில் அவர்களின் விமோசனம் அளிக்கும் திட்டமாகவும், தொழிலாளர்களுக்கு நியாயபூர்வமான ஒரு சம்பளத்தினை கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் சம்பள கூட்டு உடன்படிக்கை முதலாவது கூட்டு ஒப்பந்தம் 1967 ஆம் ஆண்டும், இரண்டாவது தடவையாக 1992 ஆம் ஆண்டும் ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டு உடன்படிக்கையானது தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம்.
இன்று மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், உள்ளனர். இவற்றுக்கெல்லாம் முன்னுதாரணமாக மலையகத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானே இலங்கையில் முதலாவது அமைச்சராக விளங்கினார். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இ.தொ.கா தலைவராக இருந்த போது உலகத் தலைவர்கள் சர்வதேச தொழிற்சங்க பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பெருந்தோட்டத்துறை மக்களின் கஷ்டங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்தி இவர்களது மேம்பாட்டிற்காக சர்வதேச மட்டத்தில் குரல் எழுப்பி வந்தார்.
எட்டு தசாப்தங்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சங்கமாக விளங்கி வருகின்றது. அதன் உறுப்பினர்களாக ஆயிரக்கணக்கான சிங்களத் தொழிலாளர்களும் உள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்கள் தோட்டத்துறையின் எல்லாப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். அத்துடன் வாலிபர், மாதர் பிரிவுகள் பலம் வாய்ந்தவையாக இருக்கின்றன. கல்வி, தொழிற்பயிற்சி கலை, கலாசாரம், இலக்கியம், விளையாட்டுத்துறை, சமூக சீர்திருத்தம் போன்றவற்றை தொழிலாளரின் வாழ்க்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்டமைப்பு மிகவும் இறுக்கமானது. தோட்ட மாவட்ட, மாநில, தேசிய மட்டங்களாகப் வகுக்கப்பட்டு இறுக்கமாக நிர்வாக, நிதி விடயங்களில் பிணைக்கப்பட்டுள்ளன. மலையக அரசியலின் இன்றைய மலர்வு இ.தொ.கா பாசறை தந்ததாகும்.
அமரர் தொண்டமான் 1977 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் அமைச்சரவை அமைச்சராக விளங்கினார். ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அஹிம்சை வழியிலும் பல்வேறு போராட்டங்கள் ஊடாகவும் பிரார்த்தனை இயக்கத்தினூடாகவும் 1985 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து வாக்குரிமையும், தேசிய அந்தஸ்தும் கிடைத்தன. இது அமரர் தொண்டமான் ஆற்றிய சேவைகளில் பெரியதாகும்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 111ஆவது பிறந்ததினத்தில் மலையக மக்கள் அன்னாரின் பணிகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்ப்பது அவசியம்.
சவரிமுத்து தேவதாஸ்
சிரேஷ்ட ஊடக இணைப்பாளர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்