அமெரிக்காவில் மேலுமொரு விமான விபத்து: 10 பேர் பலி

அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மேலும் ஒரு விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்குள் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உன லக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகர் நோக்கி செஸ்னா 208பி என்ற சிறிய ரக விமானம் பயணமாகியுள்ளது. 10 பேர் அதில் பயணித்துள்ளனர்.

பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த விமானம், புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது.

நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் விமானம ; சென்றபோது கடும் பனிப்பொழிவு நிலவியது. அப்போது விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது. எனினும், சீரற்ற வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

நோம் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனதாக கடலோர காவல்படை தெரிவித்திருந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் மாயமான விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அந்த விமானம் அலாஸ்கா கடலில் உறைந்திருந்த பனியில் விழுந்து நொறுங்கி கிடந்தது.

அதில் பயணித்த 10 பேரும் பலியாகி இருந்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக விமான விபத்து நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 10 நாட்களில் 3-வது விமான விபத்து நடந்து உள்ளது.

கடந்த 29 ஆம் திகதி வாஷிங்டனில் நடுவானில் பயணிகள் விமானம் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர் மோதி கொண்டதில் 67 பேர் உயிரிழந்தனர்.
31 ஆம் திகதி பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்த தில் 6 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles