அமைச்சரவையில் இருந்து ரொஷான் ரணசிங்கவை நீக்குமாறு அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரவை கூட்டு பொறுப்பைமீறும் வகையிலும் , மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலையை உருவாக்கும் நோக்கிலும் அவர் செயற்பட்டுவருவதாலும், அவரை தொடர்ந்து வைத்திருந்தால் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் எனவும் குறித்த அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் ரொஷான் ரணசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் அது அவரை அரசியல் ரீதியில் புகழின் உச்சியில் அமர வைக்கும் எனவும், எதிரணிகள் அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடக்கூடும் எனவும் மேலும் சில அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இது தொடர்பில் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என தெரியவருகின்றது.
