அரசியலமைப்பு பேரவையின் சுயாதீனத்தன்மைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைக்கு இடமளிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசியலமைப்பு பேரவையென்பது ஜனாதிபதியின்கீழ் இயங்கும் நிறுவனம் அல்ல. அது சுயாதீன சபையாகும்.
எனவே, ஜனாதிபதியால் அனுப்படும் பெயருக்கு அச்சபை அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற தொனியில் கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
ஊழல், மோசடிகளுக்கு எதிராக அதிகளவில் குரல் கொடுத்த கட்சிதான் ஜே.வி.பி. ,அக்கட்சியின் ஆட்சியின்கீழ் கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடாளுமன்றத்தில் கோப் மற்றும் கோபா குழு கூட்டங்களை நடத்த முடியாது. எனவே, எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டும்.” – என்றார்.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரை அரசமைப்பு பேரவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
