காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தற்போதைய அரசாங்கம் பெற்ற முதல் வெற்றி என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 20 இலட்சம் பேர் பயன்பெறும் “அஸ்வெசும” திட்டத்தை அமுல்படுத்தியமையும் 15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்ததும் ஏனைய சாதனைகளாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தின் ஒரு பகுதியினரின் ஆதரவுடன் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இவ்வாறான பரந்த பணியை அரசாங்கம் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நாட்டை எந்த இடத்தில் வைக்க முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உரித்து (உருமய) திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (05) பிற்பகல் ரங்கிரி தம்புலு விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்க காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்க முடியுமாக இருந்தால் அந்த உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இருக்க முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில், 08ஆவது பரிந்துரையில், “உரித்து திட்டத்தின் கீழ் 1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அனுமதிப்பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அரச காணிகளின் முழு உரிமையையும் விவசாயிகளுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், அவர்கள் அனுபவிக்கும் காணிகளுக்கு முழு உரிமை வழங்கும் உரித்து நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுகிறது. 20 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனாளிகளாக இனங்காணப்பட்டுள்ளன. உரித்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் கீழ் 02 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உரித்து திட்டத்தின் கீழ் காணியின் முழு உரிமைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு காணி உறுதி வழங்குவதற்கு உரிய நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் உரித்து செயற்பாட்டு செயலகமொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அடையாள ரீதியல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விவசாயிகளுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
“தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை” தேசிய திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட ‘விசேட நிலையத்தை’யும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அத்துடன், தம்புள்ள விளையாட்டரங்க வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீச்சல் தடாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நீச்சல் தடாகத்தின் நடைமுறை செயற்பாடுகளை அவதானிப்பதற்காகவும் இணைந்துகொண்டார்.
நவீனமயப்படுத்தப்பட்ட விளையாட்டு அரங்கு விளக்கு கட்டமைப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இதேவேளை, ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ‘ஊடக மையம், புதிய கேட்போர் கூடம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கம் என்பன நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நாட்டினார்.