தற்காலிகப் பின்னடைவுகளுக்காக நாம் நிரந்தர வெற்றியை இழக்க முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, கரைச்சி பிரதேச சபையின் உதயநகர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தமிழினப் படுகொலைக்கான நீதியைக் கோரிப் பெற்று, எமது அரசியல் இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள நாம், காலச்சூழலும் – களச்சூழலும் தந்திருக்கும் தற்காலிகப் பின்னடைவுகளைக் காரணம் காட்டி நிரந்தர வெற்றியை இழக்கும் நிலைக்கு வந்துவிடக்கூடாது.
அரசியல் களத்தின் உள்ளும் புறமும் எத்தனை பெரும் சவால்கள் எழுந்தாலும், இலக்கு நோக்கிய எம் பாதையும், பயணமும் அறம் சார்ந்ததாக அமையுமானால் அடைய வேண்டிய அரசியல் உரித்துகளை அடைந்தே தீருவோம்.” – என்றார்.