வீண் பேச்சுகளை பேசி நாடாளுமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கி வரும் சிலரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என கூறுவதாகவும் அவர்கள் கூறுவதற்காக தமது கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகாது எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இவர்கள் கூறியதால் எமது அணியினர் அரசாங்கத்திற்கு வரவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாகவே அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதை மறந்து விடக் கூடாது.
நாடாளுமன்றத்தில் இருக்கும் சிலர் தவறாக நடந்துக்கொள்வதால், அங்கு இருக்கும் 225 பேருக்கும் அவமரியாதை ஏற்படுகிறது. இப்படியான நிலைமையை இதற்கு முன்னர் நான் நாடாளுமன்றத்தில் கண்டதில்லை.
இப்படியான ஒருவர் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு செய்த அவமதிப்பானது முழு பெண் சமுதாயத்திற்கும் செய்த அவமதிப்பாக நான் காண்கின்றேன். சிலரது நடத்தை காரணமாக பொது மக்கள் முழு நாடாளுமன்றத்தையும் வெறுக்கின்றனர்.
அது மாத்திரமல்ல நாடாளுமன்றம் சர்வதேசத்திற்கு மத்தியில் தரம் தாழ்ந்து போகும். நான் நாடாளுமன்றத்திற்கு வந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு மதிப்பளித்தனர்.
ஒரு வார்த்தையால் கூட அவருக்கு அசௌகரியம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளை மிக கவனமாக பயன்படுத்தினர். தற்போதுள்ள சிலர் சபாநாயகரின் உத்தரவுகளை கூட மதிப்பதில்லை என்பது கவலைக்குரிய நிலைமை.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் விடுத்த அழைப்பின் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமல்லாது பொதுத் தேர்தல் வெற்றியிலும் சுதந்திரக் கட்சி முக்கிய பங்களை வகித்து என்பது அவர்கள் அறிந்த விடயம்.
இப்படி சத்தமிடும் நபர்களே மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து வீட்டுக்கு செல்ல வழிவகுத்தனர். தற்போதும் அதனையே செய்ய முயற்சித்து வருகின்றனர்.
இவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதை எம்மால் காணக் கூடியதாக உள்ளது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.